April 25, 2024

எல்லாமுமே ஆமி மயம்?

சுகாதார அமைச்சின் செயலாளராக இராணுவத்தின் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சஞ்சீவ முனசிங்க கடமைகளைப் பொறுப்பேற்றார்.சுகாதார அமைச்சில் இன்று மாலை அவர் கடமைகளை ஆரம்பித்தார்.
 இதனிடையே இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு இன்னும் ஒருமாத காலமாகலாம் என்றும் அதற்கமைய நான்கு கட்டங்களின் கீழ் பாடசாலைகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
மாத்தறை மாவட்ட செயலகத்தில் இன்று (திங்கட்கிழமை) இந்த விடயம் குறித்து கருத்து தெரிவித்த அவர், சுகாதார அதிகாரிகளின் பரிந்துரையின் அடிப்படையிலேயே பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படும் எனக் கூறினார்.
மாணவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்ட நாளில் மீண்டும் திறக்கப்படும் என்றும், பாடசாலை நடவடிக்கை மீண்டும் ஆரம்பமாகும் திகதி அடுத்த வாரம் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

குறித்த தினத்தை அறிவித்த பின்னர், நாடு பூராகவுமுள்ள பாடசாலைகள் தொற்றுநீக்கம் செய்யப்பட்டு இன்னும் 04 நாட்களுக்கு மூடப்படும் என்றும் முதலில் அதிபர், ஆசிரியர்கள் உட்பட கல்விசாரா ஊழியர்கள் பாடசாலைகளுக்கு அழைக்கப்படுவார்கள் என்றும் கூறினார்.
இதன் பின்னர் உயர்தரம், சாதாரண தரம் மற்றும் அதற்கு கீழுள்ள தரங்களைச் சேர்ந்த மாணவர்கள் படிப்படியாக பாடசாலைகளுக்கு உள்வாங்கப்படுவார்கள் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.