April 19, 2024

இனி கொரோனாவும் வாழ்வில் ஒரு பகுதி அங்கமாகும்

எங்கள் வாழ்க்கையில் இனி ஒரு பகுதியாக கொரோனா இருக்கவே போகின்றது என்று வவுனியா மாவட்ட பிராந்திய பிரதி சுகாதாரப் பணிப்பாளர் மகேந்திரன் தெரிவித்தார்.

வவுனியா மாவட்டச் செயலகத்தில் இன்று (06) இடம்பெற்ற கொரோனா மற்றும் சமகால நிலைமைகள் தொடர்பான விசேட கூட்டம் இடம்பெற்றபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும்,

கொரோனா எங்கள் வாழ்வில் ஒரு பகுதியாக இருக்கும் என்பதால் மக்கள் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.

கை கழுவுதல், முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியைப் பின்பற்றுதல் என்பவற்றை கட்டாயமாகக் கடைப்பிடித்தேயாக வேண்டும். இல்லாவிட்டால் நாம் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த முடியாமல் அது முழுமையாகப் பரவும் நிலை ஏற்படும்.

இருவருக்கிடையில் சம்பாசனை இடம்பெறும்போது இருவரும் முகக் கவசம் போட்டு கலந்துரையாடுவார்களாயின் நோய்த் தொற்று 1.5 வீதமாகக் காணப்படும். அத்துடன் சமூக இடைவெளியும் பின்பற்றப்படுமாக இருந்தால் இந்த தொற்று வீதம் மேலும் குறைவடையும்.

எனினும் இலங்கையில் பலருக்கு கொரோனாவின் தாக்கம் முக்கியமான பிரச்சினையாகத் தெரியவில்லை. சாப்பாட்டுக் கடைகளைத் திறக்குமாறு நாம் கூறியிருந்த போதிலும் அவர்கள் சுகாதார நடைமுறைகளைச் சரியாக பின்பற்றாத நிலை காணப்படுகின்றது – என்றார்.