März 29, 2024

ஊரடங்கை மீறிய 45 பேருக்கு நீதிமன்றில் நடந்த விபரீதம்

ஊரடங்குச் சட்டத்தை மீறியமை மற்றும் தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மதிக்காது நடந்தமை ஆகிய இரண்டு குற்றங்களுக்காக 45 பேருக்கு தலா 600 ரூபாய் தண்டம் விதித்து யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.பீற்றர் போல் இன்று (30) உத்தரவிட்டுள்ளார்.

கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஊரடங்கு சட்டம் நடைமுறையில் உள்ள காலப்பகுதியில் வீதியில் பயணித்த 80 பேர் வரை இந்த மாதம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

அவர்களுக்கு எதிராக இரண்டு குற்றச்சாட்டுக்களை முன்வைத்து யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் இன்று பொலிஸார் வழக்குத் தாக்கல் செய்தனர்.

இதன்போது „பொதுமக்களின் பாதுகாப்புக்காக அரசினால் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த ஊரடங்குச் சட்டத்தை மீறி அத்தியாவசிய தேவைகள் ஏதுமின்றி வேண்டுமென்று பிரதேசத்தினுள் நடமாடித் திரிந்தமையால் 1947ம் ஆண்டு 25ம் இலக்க பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் மூன்றாம் பிரிவில் குறிப்பிடப்பட்டிருக்கும் மற்றும் 1959ம் ஆண்டு 08ம் இலக்க சட்டத்தினால் திருத்தப்பட்ட 16(3) உப பிரிவின் கீழ் தண்டனைக்குரிய குற்றத்தை புரிந்துள்ளீர்.

முதலாம் குற்றச்சாட்டு மேலதிகமாக நீவிர் அதே நாள், அதே நேரம், அதே இடத்தில் அதே சம்பவக் கோவையின் போது, தொற்று நோய் பரவுவதைத் தடுப்பதற்கு தனிமைப்படுத்தப்பட்டு அல்லது தொற்று நோய் நிலவுகின்ற இடங்களுக்கும் வேறு இடங்களுக்கும் இடையிலான தொடர்பினை கட்டுப்படுத்துவதற்கு அரசினால் விதிக்கப்பட்டிருக்கும் சட்டங்களைத் தெரிந்து கொண்டு அல்லது அந்தச் சட்டங்களைத் தெரிந்துகொள்ள காரணம் இருந்தும் வேண்டுமென்று அந்தச் சட்டங்களுக்குக் கீழ்ப்படியாது நடந்து கொண்டமையால் இலங்கை  தண்டனைச் சட்டக்கோவை 264ம் பிரிவின் கீழ் தண்டனைக்குரிய குற்றத்தைப் புரிந்துள்ளீர்.“

மேற்சொன்ன இரண்டு குற்றச்சாட்டுக்களை முன்வைத்து 45 பேருக்கு எதிராக யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.பீற்றர் போல் குற்றப்பத்திரத்தை வாசித்துக் காண்பித்தார்.

சந்தேக நபர்கள், தம்மீதான குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொண்டார். அதனால் அவர்களை குற்றவாளிகளாக இனங்கண்ட மன்று, ஊரடங்குச் சட்டத்தை மீறிய குற்றத்துக்கு 100 ரூபாய் தண்டப் பணமும் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறியமைக்காக 500 ரூபாய் தண்டப்பணமும் என அனைவருக்கம் தலா 600 ரூபாய் தண்டம் விதித்து உத்தரவிட்டது.