April 16, 2024

கொரோனா கிருமித்தொற்று காரணமாக போடப்பட்ட ஊரடங்கு உத்தரவை மீறுபவர்களை சுட்டுத்தள்ளுங்கள்: பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி கொடூர உத்தரவு!

கொரோனா கிருமித்தொற்று காரணமாக பிலிப்பைன்ஸ் நாடு முடக்கப்பட்டுள்ள வேளையில் முடக்க ஆணையை மீறுவோர் சுட்டுத்தளப்படலாம் என்று அந்நாட்டு ஜனாதிபதி ரோட்ரிகோ டுட்டர்டே எச்சரித்துள்ளார்.

தொலைக்காட்சியில் நேற்று (2) உரையாற்றிய அவர், மருத்துவ ஊழியர்களைத் தவறாக நடத்துவது மிகக் கடுமையான குற்றம் என்றும் அது ஒருபோதும் சகித்துக்கொள்ளப்படமாட்டாது என்றும் தெரிவித்தார்.

நாட்டில் கிருமித்தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையைக் குறைக்க சுகாதாரத்துறை அதிகாரிகள் அரும்பாடுபட்டு வரும் வேளையில், தனிமைப்படுத்தப்படும் உத்தரவை நாட்டு மக்கள் அனைவரும் கடைப்பிடித்து ஒத்துழைப்பை நல்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

பிலிப்பைன்சில் இதுவரை கொரோனா கிருமித்தொற்று 107 உயிர்களைப் பலிவாங்கியுள்ளது. 2,633 பேரைக் கிருமித்தொற்று பீடித்துள்ளது. அங்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கானோர் கருமித்தொற்றுக்கு ஆளாகின்றனர்.

இன்று ஒரே நாளில் அங்கு 11 புதிய மரணங்களும் 322 புதிய கிருமித்தொற்று சம்பவங்களும் பதிவாகின.

“நிலைமை நாளுக்கு நாள் மோசமாகிக்கொண்டிருக்கிறது. இதனைக் கட்டுப்படுத்த பொலிசுக்கும் இராணுவத்துக்கும் எனது கட்டளை என்னவென்றால், கட்டுப்பாட்டை மீறுவோரால் பிரச்சினை ஏற்பட்டு, அவர்கள் உங்கள் உயிருக்கும் ஆபத்தை ஏற்படுத்த முற்பட்டால், அவர்களைச் சுட்டுத்தள்ளுங்கள்,” என்று ஜனாதிபதி கூறினார்.

மணிலாவில் ஏழை மக்கள் அதிகம் வாழும் பகுதியில் அரசாங்க உணவு உதவி தொடர்பில் அங்குள்ள குடியிருப்பாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியதால் சிலர் கைது செய்யப்பட்ட பிறகு, ஜனாதிபதி டுட்டர்டேயின் இக்கடும் எச்சரிக்கை வெளியானது.

கிருமித்தொற்றின் தொடர்பில் மருத்துவ சமூகத்தினருக்கு எதிராக வெறுப்புணர்ச்சி அதிகரித்து வருவதால் அவர்கள் உடல் அளவிலும் மனதளவிலும் தாக்கப்படுகின்றனர். இது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி ஆணித்தரமாகக் கூறினார்.

ஜனாதிபதியின் இந்த ஆணை, வன்முறையைத் தூண்டக்கூடும் என்று மனிதாபிமான ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதற்குமுன் இதுபோன்ற ஆணையை ஜனாதிபதி டுட்டர்டே, போதைப்பொருளுக்கு எதிரான போராட்டத்தில் பயன்படுத்தினார்.

அதில் பொலிசாரும் மர்ம நபர்களும் போதைப்பொருளை விற்கும் அல்லது பயன்படுத்தும் பல்லாயிரக் கணக்கானோரைக் கொன்று குவித்தனர்.

ஆனால், அது சட்டத்தின்படிதான் மேற்கொள்ளப்பட்டது என்றும் பொபோலிசார் தங்கள் செயல்களை அப்போது தற்காத்துப் பேசினர்.

“ஜனாதிபதி டுட்டர்டேயின் எச்சரிக்கை பொது ஒழுங்கின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கிறது. தவிர, யாரும் இதன் தொடர்பில் சுடப்படமாட்டார்கள்,” என்று பிலிப்பைன்ஸ் தேசிய பொலிஸ் படையின் தலைவர் தெரிவித்தார்.