நாட்டில் தற்போது நிலவி வரும் எரிபொருள் தட்டுப்பாட்டுப் பிரச்சினைக்கு மஹிந்த ராஜபக்சக்களே காரணம் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நலின் பண்டார தெரிவித்துள்ளார்.
கட்சியின் தலைமையகம் சிறிகொத்தவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்…
ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் தேவையற்ற இடங்கள் தேவையற்ற வகையில் அபிவிருத்தி செய்யப்பட்டது.
இதனால் நாட்டின் முக்கியமான எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் அபிவிருத்தி செய்யப்படவில்லை. எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் உரிய முறையில் பராமரிக்கப்படவில்லை.
மஹிந்த ஆட்சிக் காலத்தில் இவ்வாறான அத்தியாவசிய தேவைகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்படவில்லை.
கொழும்பை அபிவிருத்தி செய்யாது ராஜபக்சக்கள் தங்களது ஊரை அபிவிருத்தி செய்தனர். இதனால் நாட்டுக்கு தேவையான எரிபொருளை பெற்றுக்கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டது.
45 முதல் 50 நாட்களுக்கு தேவையான எரிபொருளை களஞ்சியப்படுத்தக்கூடிய களஞ்சியசாலைகள் காணப்படுகின்றன.
எனினும் முழுமையாக எரிபொருள் தீரும் வரையில் அதிகாரிகள் என்ன செய்தார்கள் என்பது பற்றியும் விசாரணை செய்யப்பட வேண்டியது என தெரிவித்துள்ளார்.