வேட்டெலி முழங்கிய நாட்டினிலே
காட்டிடை கனல் வளர்த்த வீரர்களே
தோற்றிடா கொள்கையின் தொட்டிலதில்
ஊட்டிய தவமதின் உன்னதப் பேறுகளே
முள்ளிவாய்க்காலை முடிவென்று யார் சொன்னது
அள்ளித்தின்ற மண்ணில் ஆயிரமாயிரம் கதையுண்டு
அம்மணமாய் கிடந்த உடல்கள் அத்தனையிலும்
அழியாத அஸ்திரத்தீயால் வரலாறு வரையப்பட்டது
இறுதியுரையின் முடிவை மீண்டும் கேளுமப்பா
உறுதிபட உரைத்தாரே எம் இனத்தின் அப்பா
வஞ்சனையின் போகமென்று வருந்தி நீயும்..
வலுவிழந்து போகாதே போராடு காலத்தோடு..
தியாகங்கள் உறங்கும் பதியின் மேலே
கோமாளிகளின் அரண் எழட்டும்– இன்னும்
உங்களின் அடிகளை மாற்றான் மறக்கவில்லை
எழுந்துவிடுவீர்கள் என்ற பயமாக கூட இருக்கலாம்
ஆனந்தபுர முற்றுகையின் இறுதிச்சன்னத்திலே
வானுயந்து நின்றது வீரப்பரம்பரையின் தீரம்
இலட்சக்கணக்கான எதிரிகளை பலியெடுத்தே
தமிழனின் கணைகள் மௌனமானது தெரியுமா ?
வெற்றுக் கப்பல்களை அனுப்பிய பேராசைகளால்
இரகசியம் கசியவிட்ட வெற்று போலிகளால்
பதவிக்காக மௌனமிருந்த அரசியல் கதிரைகளால்
சேர்ந்து வந்த இருபது தேசங்களாலே இந்நிலை
இது எம் பலவீனமல்ல ..தமிழனை அடக்கிப்பார்க்க
இருபது அரசுப்பலம் தேவைப்பட்டிருக்கிறதே..
ஆனால் இன்றைய நிலை என்ன..?
பிள்ளையை கிள்ளியவனே தொட்டிலும் ஆட்டுகிறான்
தாயின் முலையறுத்தவனே –சேய்க்கு
பால்மாவை பரிந்துரை செய்கிறான்
நிலாக்காட்டி சோறூட்டிய தந்தை
காணாமல்போனார் பட்டியலில்– இன்று
வெசாக்கூட்டு வெளிச்சத்தால்
நகரத்து நிலவதோ வெட்கத்திலே…
பூகோளச் சுற்றுகைச் சூட்சுமப்புள்ளி ஒருநாள்
பாராமல் போகாது தமிழனை ஒருமுறையேனும்
அரசியல் பேசும் வியாபாரிகளை காலம் துரத்தும்
நாயகர்கள் காவியங்கள் சாசனமாய் வரையப்படும்
என் இனத்து இளைய தலைமுறைக்கு சொல்லிக்கொடு கட்டாயம் அஞ்சாதே
முந்தையரின் வீரகாவியத்தை நினைவுபடுத்தியிரு..
எத்தனை காலம் கடந்தோடினும் ~எமக்கு
பொற்காலத்தவமென்பது அக்காலமே.,,
~வன்னியூர் செந்தூரன்~